நெல்லை-தீபாவளி திருட்டுக்காக 50 பீகார் பெண் கொள்ளையர்கள் ஊடுறுவல்
நெல்லை: தீபாவளி பண்டிகையை ஓட்டி நெல்லையில் 50க்கும் மேற்பட்ட பெண் கொள்ளையர்கள் ஊடுருவி உள்ளனராம்.
நெல்லையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பல்வேறு கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் பணம், மற்றும் பொருட்களை அள்ளி சென்றனர். போலீசார் விசாரணை நடத்தியதில் பீகாரை சேர்ந்த கொள்ளையர்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் இவர்கள் அங்கிருந்து தமிழகத்திற்கு வந்து பல்வேறு குழுக்களாக பிரிந்து பெரிய கடைகளை நோட்டமிட்டு தங்கள் திட்டத்தை நிறைவேற்றி வந்தனர். இதே போல் இந்த ஆண்டும் பெரிய கடைகளில் கொள்ளையடிக்க பீகார் கொள்ளையர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையொட்டி நெல்லை மாநகர போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாநகரில் உள்ள ஜவுளி, நகைகடைகளின் உரிமையாளர்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விழிப்புடன் இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பண்டிகை நெருங்குவதால் கடைகளுக்கு இரவு நேர காவலர்களை நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.