இன்னும் சில நாட்களில் தொடங்கும் வட கிழக்குப் பருவ மழை: வானிலை மையம்
அக்டோபர் மாத மத்தியில் வட கிழக்குப் பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அது தாமதமாகி வருகிறது. இன்னேரம் மழை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இன்னும் கூட வெயில் அடித்துக் கொண்டுதான் உள்ளது. அவ்வப்போது சில பகுதிகளில் மழை பெய்தாலும் கூட அது வெப்பச் சலனத்தால் ஏற்பட்ட மழை என்று வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
இந்த நிலையில் ஆந்திராவுக்கு மேலே, வளி மண்டல மேல் அடுக்குகளில் திரண்டுள்ள கக் கூட்டங்களில் ஏற்பட்டுள்ள சுழற்சி ஓய்ந்தால் வடகிழக்குப் பருவ மழை தொடங்கி விடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறுகையில்,
ஆந்திரத்தின் மீது வளி மண்டல உயர் அடுக்குகளில் மேகக் கூட்டங்களில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆந்திரத்தின் பல்வேறு பகுதிகளில் சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்துள்ளது.
இப்போது வீசும் மேலைக் காற்று நின்ற பின்பு, கீழைக் காற்று வீசத் தொடங்கும். இதையடுத்து சில நாள்களில் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கக் கூடும் என்றார்.
சென்னையில் மேகமூட்டம்
தலைநகர் சென்னையில் தொடர்ந்து வெயில் அடித்து வருகிறது. அதேசமயம், இன்று காலை முதல் மேகமூட்டமாக காணப்படுகிறது. சில இடங்களில் தூறல் மழை பெய்துள்ளது.
இன்னும் முடியாத,தென் மேற்கு பருவமழை ஆந்திரத்தின் கடலோரப் பகுதிகள், தெலங்கானா மற்றும் கர்நாடகத்தின் வடக்கு உள்புறப் பகுதிகளில் இப்போது தீவிரம் அடைந்துள்ளது.
இதன் எதிரொலியாக கர்நாடகம், ஆந்திரத்தின் கடலோரப் பகுதிகளிலும், தெலங்கானா, கேரளம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் அடுத்த 48 மணி நேரத்துக்கு பரவலாக கன மழை பெய்யக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும். சென்னை உள்ளிட்ட வடதமிழகம் மற்றும் புதுவையில் கடலோரப் பகுதிகளில் தென் மேற்கில் இருந்து மேற்கு நோக்கி மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த கடற்காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.