அயோத்திப் பிரச்சினைக்கு சமரச தீர்வு காண செல்கிறார் ஜெயேந்திரர்
காஞ்சிபுரம்: அயோத்தி பிரச்சினைக்கு சமரச தீர்வு காணும் முயற்சிகளில் கலந்து கொள்வதற்காக காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் நவம்பர் 1ம் தேதி அயோத்தி செல்கிறார்.
அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து தற்போது அங்கு சமரசத் தீர்வுக்கான முயற்சிகள் பல்வேறு வழிகளிலும் நடக்க ஆரம்பித்துள்ளன. வழக்கை தொடர்ந்தவர்களில் ஒருவரான பெரியவர் முகம்மது அன்சாரி இந்த முயற்சிகளில் முன்னணியில் இருக்கிறார்.
அவரது தீவிர முயற்சியால் அயோத்தி அனுமன் கோவிலில் வைத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த நிலையில் ஜெயேந்திரரும் அவராகவே இந்த விவகாரத்தில் ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளார். தனக்குத் தெரிந்த முஸ்லீம் தலைவர்கள், இந்துப் பிரதிநிதிகளுடன் அவர் பேசினார்.
தற்போது நேரடியாக அயோத்தி சென்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக நவம்பர் 1ம் தேதி அவர் அயோத்தி போகிறாராம்.
அயோத்தி விவகாரத்தில் தொடர்புடைய சாமியார்கள், சாதுக்களை சந்தித்துப் பேசுகிறார். முடிந்தால் முஸ்லீம் மதத் தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசுவாராம்.