ஒபாமாவுடன் ஹிலாரி இந்தியா வரமாட்டார்-அமெரிக்கா
வாஷிங்டன்: இந்தியா வரவுவுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் அந் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வர மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வரும் அமெரிக்க அதிபருடன் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வராமல் இருப்பது இதுவே முதல் முறையாகும்.
ஒபாமா இந்தியாவுக்கு வரும் நேரத்தில் ஹிலாரி கிளிண்டன் ஆஸ்திரேலியா செல்ல வேண்டியுள்ளதாகவும், அமெரிக்க-ஆஸ்திரேலிய அமைச்சக ஆலோசனையின் 25ம் ஆண்டு விழாவில் அவர் பங்கேற்க வேண்டியுள்ளதாலும் அவர் இந்தியாவுக்கு வர மாட்டார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு வர ஹிலாரி கிளிண்டன் ஆவலாக இருந்தாலும் முக்கியமான பணியால் அவர் முடியாத நிலையில் உள்ளார் என்றும், அவருக்குப் பதிலாக வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஒபாமாவுடன் இந்தியாவுக்கு வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஒபாமா இந்தியா வருவதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை. பெரும்பாலும் அவர் நவம்பர் 6ம் தேதி இந்தியா வருவார் என்று தெரிகிறது. அவருடன் அவரது மனைவி மிஷேலும் வருகிறார்.
பேச்சுவார்த்தையில் காஷ்மீர் விவகாரம் இடம்பெறாது:
இந் நிலையில் ஒபாமாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில் காஷ்மீர் விவகாரம் இடம்பெறாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மலேசியாவில் மன்மோகன்:
இதற்கிடையே மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தின் இரண்டாம் கட்டமாக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மலேசியா சென்றார்.
இரண்டு நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு டோக்கியோவில் இருந்து அவர் கோலாலம்பூர் சென்றார்.
மலேசியாவில் அந் நாட்டுப் பிரதமர் முகமது நஜிப் துன் அப்துல் ரஸாக்குடன் சிங் பேச்சு நடத்தினார்.
அங்கிருந்து வியட்நாம் புறப்பட்டுச் செல்கிறார் மன்மோகன் சிங்.