சேலம் 6 கொலைகள்-சிபிஐ விசாரணைக்கு ஜெ கோரிக்கை
சென்னை : சேலத்தில் ஒரே குடும்பத்தி்ல் 6 பேர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளர் குப்புராஜ் உள்பட அவரது குடும்பத்தினர் 6 பேர் சொத்து தகராறு காரணமாக கடந்த ஆகஸ்டு மாதம் கொடூரமாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தக் கொலை வழக்கை விசாரித்து வந்த மாநில குற்ற புலனாய்வுத்துறை, சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவரும் பனமரத்துப்பட்டி திமுக ஒன்றியச் செயலாளரும், திமுக அரசின் வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனுமான பாரப்பட்டி சுரேஷ்குமாருக்கு தொடர்பு இருப்பதாகக் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில், அவரை கைது செய்தது.
இந்த வழக்கில் இவருடன் சேர்த்து திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் சம்பத், அம்மாபாளையத்தைச் சேர்ந்த செந்தில் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க சேலம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6 பேரின் கொடூரக் கொலைக்கு காரணமான சுரேஷ் குமாரை, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சைரன் பொருத்தப்பட்ட தேசிய கொடி கட்டப்பட்ட அரசு வாகனத்தில் சேலம் மத்திய சிறைச்சாலைக்கு சென்று சந்தித்து ஆறுதல் வார்த்தை கூறியிருக்கிறார்.
இவரைத் தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆதிசங்கர், தலைவாசல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, சேலம் மாநகர மேயர் உள்பட பலர் கொலையாளி சுரேஷ்குமாரை நேரில் சந்தித்து ஆறுதல் வார்த்தை கூறியுள்ளனர்.
கொலைக் குற்றவாளிக்கு ஆதரவாக நடந்து கொண்டுள்ள அமைச்சருக்கும், மேயருக்கும், இதர திமுகவினருக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டம்- ஒழுங்கு காக்கப்பட வேண்டும். உண்மையான குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்ற அக்கறை கருணாநிதிக்கு இருந்தால் உடனடியாக சேலம் கொலை வழக்கை மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
கொலை குற்றவாளியை சிறையில் சந்தித்த வீரபாண்டி ஆறுமுகம், காஞ்சீபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினரை மிரட்டிய தா.மோ. அன்பரசன் ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.