பீகார் சட்டசபைத் தேர்தல்-விறுவிறுப்பான 3வது கட்ட வாக்குப் பதிவு
பாட்னா: பீகார் மாநில சட்டசபைத் தேர்தலில் இன்று காலை 3வது கட்ட வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மொத்தம் 48 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது.
ஏற்கனவே இரண்டு கட்ட வாக்குப் பதிவு முடிந்து விட்ட நிலையில் இன்று 3வது கட்ட வாக்குப் பதிவு காலையில் தொடங்கியது. இந்த தேர்தலுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மொத்தம் 1.03 கோடி வாக்காளர்கள் இதில் பங்கேற்கின்றனர். இவர்களில் 47.56 லட்சம் பேர் பெண்கள் ஆவர். மொத்தம் 65 பெண்கள் உள்பட 785 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இன்றைய தேர்தலில் முன்னாள் முதல்வர் ராப்ரிதேவி போட்டியிடும் இரு தொகுதிளிலும் (ரகோபூர், சோனேபூர்) வாக்குப் பதிவு நடைபெறுவதால் தேர்தல் விறுவிறுப்பாகியுள்ளது.
இன்றைய தேர்தலில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம் 35 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சியான பாஸ்வானின் எல்ஜேபி 13 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
ஐக்கிய ஜனதாதளம் மற்றும் கூட்டணிக் கட்சியான பாஜக தலா 24 தொகுதிகளில் களத்தில் நிற்கின்றன.
காங்கிரஸ் கட்சி 48 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.
வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருவதாக டிஜிபி நீல்மணி தெரிவித்துள்ளார்.
மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.