முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை-பசும்பொன் கிராமத்தில் பலத்த பாதுகாப்பு
ராமநாதபுரம் கமுதி தாலுகாவில் உள்ள பசும்பொன்னில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை வருகிற 30 ந் தேதி வழக்கம் போல சிறப்பு ஏற்பாடுகளுடன் நடைபெறவுள்ளது.
இதில் திமுக மற்றும் தமிழக அரசின் சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, காங்கிரஸ் சார்பில் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் திரளாக வருகின்றனர்.
இதையடுத்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்று காவல்துறை டிஜிபி லத்திகா சரண், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் ஆகியோர் மூன்று மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் லத்திகா சரண் செய்தியாளர்களிடம் பேசுகையில், குருபூஜை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அடுத்து கமுதிக்கு செல்கிறோம்.
பாதுகாப்பு பணியில் எவ்வளவு போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பது இறுதி செய்யப்படவில்லை. பூஜைக்கு வருபவர்கள் வாகனங்களின் மேற்கூரையில் அமர்ந்து செல்லாமல் தடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பசும்பொன்னுக்கு வரும் அரசியல் தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார்.
தேவர் குருபூஜைக்கு வருவோருக்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.