தமிழகத்தில் ஐந்து ஐஜிக்கள் ஏடிஜிபிக்களாக பதவி உயர்வு
தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி ஊர்க்காவல் படையின் புதிய கூடுதல் டிஜிபியாக முத்துக்கருப்பன் மாற்றப்பட்டுள்ளார்.
சிறப்பு அதிரடிப்படை கூடுதல் டிஜிபியாக ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை புறநகர் காவல்துறை ஆணையராக இருந்து வரும் ஜாங்கிட் கூடுதல் டிஜிபியாக்கப்பட்டு அதே பணியிடத்தில் நீடிக்கிறார்.
திரிபாதி சிறைத்துறை கூடுதல் டிஜிபியாகவும், காந்திராஜன் மது விலக்குப் பிரிவு கூடுதல் டிஜிபியாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
மீண்டும் முத்துக்கருப்பன்
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் முத்துக்கருப்பன் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்தவர். நள்ளிரவில் கருணாநிதியை வீடு புகுந்து கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர். பின்னர் அதிமுக ஆட்சியின் இறுதிக் காலத்தில் முத்துக்கருப்பனை சஸ்பெண்ட் செய்தார் ஜெயலலிதா.
பின்னர் இவர் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட இவர் காத்திருப்போர் பட்டியலிலேயே நீடித்து வந்தார். நான்கு ஆண்டு காலம் எந்தப் பொறுப்பும் கொடுக்கப்படாமல் இருந்து வந்த அவர் முதல்வர் கருணாநிதியைப் போய்ப் பார்த்து வணக்கம் வைத்து விட்டு வந்தார். அப்படியும் பதவி கிடைக்கவில்லை.
பின்னர் கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக தலைமைக் கண்காணிப்பு அதிகாரியாக மாற்றப்பட்டார். தற்போது கூடுதல் டிஜிபியாக இவருக்குப் பதவி உயர்வு கிடைத்துள்ளது. இருப்பினும் ஊர்க்காவல் படைக்கே இவர் மாற்றப்பட்டுள்ளார்.