கூடுதலாக 1000 மெ.வாட் மின்சாரம்-மத்திய அரசிடம் தமிழகம் கோரிக்கை
டெல்லி: தமிழகத்திற்கு 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரம் தர வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று டெல்லியில், மத்திய மின்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவை ஆற்காடு வீராசாமி சந்தித்துப் பேசினார்.
பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய தொகுப்பிலிருந்து அளிக்க வேண்டும் என்று ஷிண்டேவிடம் கோரினேன். பார்க்கலாம் என்று கூறியுள்ளார். முடிந்தால் நவம்பர் மாதத்திலிருந்தே இந்த மின்சாரத்தை வழங்குமாறும் கேட்டுக் கொண்டேன். பரிசீலிப்பதாக கூறியுள்ளார் என்றார்.
ஷிண்டே கூறுகையில், ஏற்கனவே கூடுதல் மின்சாரம் கோரி முன்பே 2 அல்லது மூன்று முறை வீராசாமி என்னை சந்தித்திருந்தார். அப்போது நாடு முழுவதும் மின்சாரப் பற்றாக்குறை நிலவியதால் தர முடியவில்லை. தற்போது நிலைமை மேம்பட்டுள்ளது. எனவே கூடுதல் மின்சாரம் வழங்குவது குறித்த சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளேன். நிச்சயம் தமிழகத்தின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார்.