இளங்கோவன் என்ன பேசினாலும் கவலையில்லை-தங்கபாலு
சென்னை: நான் சோனியா காந்தியின் கட்டளைப்படி செயல்பட்டு வருகிறேன். எனவே ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னைப் பற்றி என்ன பேசினாலும் எனக்குக் கவலை இல்லை என்று ஒரே வார்த்தையில் கூறி விட்டார் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.
முன்பு திமுகவையும், அதன் அரசையும் கடுமையாக சாடி வந்த இளங்கோவன் சமீப காலமாக மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவையும் கடுமையாக சாடி வருகிறார். கட்சியை கெடுத்து விட்டார், முடக்கி விட்டார், செயல்படாத தலைவராக இருக்கிறார், திமுகவிடம் அடிமை போல இருக்கிறார் என்று சகட்டு மேனிக்குப் பேசி வருகிறார்.
நேற்று நடந்த வாழப்பாடி ராமமூர்த்தி நினைவு நாள் நிகழ்ச்சியின்போது காங்கிரஸை முடக்கி விட்டார் தங்கபாலு. விரைவில் கட்சித் தலைமை மாறும் என நம்புகிறோம் என்று கூறியிருந்தார் இளங்கோவன்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த ராமமூ்ர்த்தி நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய தங்கபாலுவிடம் இளங்கோவன் இப்படி தொடர்ந்து திட்டி வருகிறாரே, அதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு தங்கபாலு, நான் அன்னை சோனியா காந்தி கட்டளைப்படி செயல்பட்டு வருகிறேன். எனவே இளங்கோவன் பேசுவது குறித்து எனக்குக் கவலை இல்லை என்றார்.