ஹெட்லி குறித்த தகவலை இந்தியாவிடம் கூறாமல் அமெரிக்கா மறைத்து விட்டது-பிள்ளை
இதுகுறித்து பிள்ளை கூறுகையில், பாகிஸ்தானிய அமெரிக்க தீவிரவாதியான டேவிட் கோல்மேன் ஹெட்லி, மும்பை தாக்குதல் குறித்த சதித் திட்டத்தில் தொடர்பு கொண்டிருப்பது குறித்த தகவலை முன்பே அமெரிக்கா இந்தியாவிடம் தெரிவிக்காதது பெருத்த ஏமாற்றத்தையே தருகிறது.
ஹெட்லியின் பெயரை அவர்கள் ஒருபோதும் நமக்குத் தெரிவிக்கவில்லை. அவர்கள் முன்பே சொல்லியிருந்தால், மும்பைத் தாக்குதல் திட்டத்தைத் தடுத்திருக்கலாம். 2009ம் ஆண்டு மார்ச் மாதம் ஹெட்லி இந்தியாவுக்கு வந்தபோது அவனை எளிதாக பிடித்திருக்கலாம்.
மும்பைத் தாக்குதலுக்கு முன்பும் சரி, பின்னரும் சரி ஹெட்லியின் பெயரை அமெரிக்கா நமக்குத் தரவில்லை என்பதே உண்மை.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்ன மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளிக்கத் தயாராக உள்ளோம்.
ஒபாமா வருகையின்போது அசம்பாவிதம் நடக்குமா என்பது குறித்து எந்த உளவுத் தகவலும் இதுவரை இல்லை. இருப்பினும் ஒபாமாவின் வருகை பிரச்சினையில்லாமல் முடியும் என்று நம்புகிறோம். அதற்கேற்ப அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
உளவுத் தகவல்களை பரிமாறிக் கொள்வில் இந்தியா, அமெரிக்கா இடையே நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார் பிள்ளை.
ஹெட்லி குறித்த பிள்ளையின் கருத்து தொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டிம்மோத்தி ரோமர் கூறுகையில், மும்பை தாக்குதலுக்கு முன்பும், பின்பும் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து உளவுத் துறைத் தகவல்களை இந்தியாவுடன் அமெரிக்கா பகிர்ந்து கொண்டுள்ளது.
ஹெட்லியிடம் விசாரணை நடத்த இந்தியா கோரியபோது, அதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது என்றார். ஆனால் ஹெட்லி பெயரை இந்தியாவிடம் கூறினோம் என்று ரோமர் தெரிவிக்கவில்லை.
ஹெட்லி, அமெரிக்காவுக்கே ஒரு உளவாளியாக இருந்துள்ளார் என்பது நினைவிருக்கலாம். இந்தத் தகவலையும் அமெரிக்கா இந்தியாவிடமிருந்து மறைத்து விட்டது குறிப்பிடத்தக்கது.