விஜயகாந்த் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை-வெங்கையா நாயுடு
சென்னை: பாஜகவை ஊழல் கட்சி என்கிறார் விஜயகாந்த். அவர் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். அரசியலில் விஜயகாந்த் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது உள்ளது. ஆகவே இது பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்று கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு.
சென்னை வந்த வெங்கையா நாயுடு அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவரிடம் பாஜகவை ஊழல் கட்சி என்று விஜயகாந்த் கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, விஜயகாந்த் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். அரசியலில் விஜயகாந்த் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது உள்ளது. ஆகவே இது பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்றார் வெங்கையா.
தொடர்ந்து அவர் பேசுகையில்,
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. எனவே கூட்டணி பற்றி இப்போது ஒன்றும் சொல்ல முடியாது. முதலில் எங்கள் கட்சியை பலப்படுத்த வேண்டும்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி விசுவ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் எம்.பி.க்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு தி.மு.க. எம்.பி. கையெழுத்து போட்டு இருக்கிறார். ராமர் கோவில் பிரச்சினை ஒரு கட்சிக்கு சொந்தமானது அல்ல. இதில் தி.மு.க. எம்.பி. கையெழுத்து போட்டு இருப்பது அரசியல் சம்பந்தப்பட்டது அல்ல. எனவே இதை அரசியல் ஆக்கவேண்டாம்.
டெல்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய பிரபல எழுத்தாளர் அருந்ததிராய், காஷ்மீர் விடுதலை இயக்க தலைவர் கிலானி ஆகியோர் காஷ்மீருக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்றும், காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை என்றும் பேசியுள்ளனர்.
இவர்களின் இந்த பேச்சு பாகிஸ்தானுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜம்மு காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
வாக்கு வங்கி அரசியலுக்காக பிரிவினைவாதத்தை துண்டும் வகையில் பேசிய அருந்ததிராய், கிலானி போன்றவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசிய அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மற்ற பிரிவினைவாதிகள் குரல் ஓங்கி ஒலிக்கும். அவர்கள் பிரிவினைவாதத்தை பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள்.
மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் சி.பி.ஐ., கவர்னர் மாளிகை, வருமான வரித்துறை ஆகிவற்றை பயன்படுத்தி எதிர்க்கட்சியை ஒடுக்கும் செயலில் ஈடுபடுகிறார்கள். எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளை கவிழ்க்க சதி திட்டம் தீட்டுகிறது.
கர்நாடக மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதீய ஜனதா அரசை கவிழ்ப்பதற்காக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி சென்னை, கொச்சி, கோவா, மும்பை போன்ற இடங்களுக்கு குமாரசாமி அழைத்து சென்றுள்ளார். இவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
ஆனால் பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வீடுகளில் மட்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர் என்றார் வெங்கையா.