வன்னியில் தமிழர்களுக்கு ஒதுக்கப்பட்ட உழவு கருவிகள் சிங்களர்களுக்கு.. கதறியழுத செஞ்சிலுவை அதிகாரி!
வன்னி: வன்னியில் தமிழர்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட உழவு எந்திரங்கள் மற்றும் கருவிகளை சிங்களர்களுக்கு வழங்கிய கொடுமையை காணச் சகிக்காமல் செஞ்சிலுவைச் சங்க பெண் அதிகாரி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.வன்னியில் அண்மையில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு வழங்க இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் உழவுக் கருவிகள் தரப்பட்டுள்ளன. ஆனால் இவற்றை சிங்களவர்களுக்கு வழங்கியதாக செய்திகள் வெளியாகின.
செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் சிலரே இந்த வேலையைச் செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால் வட மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரஸ்ரீயின் உத்தரவின் பேரிலேயே வழங்கப்பட்டதாக இப்போது தெரிய வந்துள்ளது.
உழவு இயந்திரங்கள் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கைக்கான தலைவர் கண்ணீர் விட்டு அழுதார். பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பட்டினியிலும் வெட்ட வெளியிலும் கிடக்க, அனைத்து வகையிலும் பாதுகாப்பான சிங்களர்களுக்கு இந்த எந்திரங்கள் வழங்கப்படுவதை காண முடியாமல் அவர் அழுததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் புகைப்படமாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஊடகங்களில் பிரசுரமாகி உள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாம்