தீபாவளி எதிரொலி-சமையல் எண்ணெய் விலை அதிகரிப்பு: சர்க்கரை விலையும் உயர்ந்தது
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் தான் உள்ளது. பண்டிகை காலம் என்றால் இனிப்புகளும், அறுசுவை உணவும் தயாரிக்கப்படுவது வழக்கம். இவற்றைத் தயாரிக்கத் தேவைப்படும் சமையல் எண்ணெயின் விலை தற்போது அதிகரித்துள்ளது.
சமையல் எண்ணெயின் விலை விவரம் வருமாறு,
1 கிலோ பாமாயில் - முந்தைய விலை ரூ. 50, தற்போது ரூ. 54
1 கிலோ சூரிய காந்தி எண்ணெய் - முந்தைய விலை ரூ. 67, தற்போது ரூ. 78
1 கிலோ சாதா கடலை எண்ணை - முந்தைய விலை ரூ. 82, தற்போது ரூ. 88
1 கிலோ வனஸ்பதி - முந்தைய விலை ரூ. 60, தற்போது ரூ. 65
1 கிலோ தேங்காய் எண்ணை - முந்தைய விலை ரூ. 90, தற்போது ரூ. 100
இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் இருந்து பாமாயிலும், தென் அமெரிக்கா, ரஷியாவில் இருந்து சூரிய காந்தி எண்ணெயும் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
இதற்கிடையே சர்வதேச சந்தையில் தீபாவளியையொட்டி சமையல் எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது. இதையடுத்து கடந்த 1 வார காலமாக எண்ணெய் விலை அதிகரித்த வண்ணம் இருப்பதாக அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.சொரூபன் தெரிவித்தார்.
இதே போன்று இனிப்புகள் தயாரிக்கத் தேவைப்படும் சர்க்கரையின் விலையும் கிலோவுக்கு ரூ. 2 அதிகரித்து ரூ. 28-ஆக விற்கிறது.