அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை!
தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள், அணைகளில் நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்து வருகிறது.
இலங்கை மற்றும் தமிழகத்தையொட்டி உள்ள வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவானதால் அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது.
இதற்கிடையில் தென் மேற்கு பருவ மழை முடிந்து, வெப்ப சலனத்தால் சில தினங்கள் மழை பெய்தது.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், புதுச்சேரி, சேலம், கோவை, நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளில் கனமழை பெய்தது. இரவில் தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது.
இந்த நிலையில் வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் தொடர்ந்து நீடித்து வருவதால் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாவது:
"வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நீடித்து வருவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்கள் பலத்த மழை செய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது கனமழை பெய்யும்.
மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்கலாம். அது தொடர்பான எச்சரிக்கை ஒன்றும் விடுக்கப்படவில்லை. சென்னை நுங்கம்பாக்கத்தில் 46.8 மில்லி மீட்டர், மீனம்பாக் கத்தில் 64.3 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது."