பசும்பொன்னில் தேவருக்கு அஞ்சலி செலுத்தினார் ஜெயலலிதா!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 28-ந்தேதி தொடங்கியது.
முதல்நாள் முத்துராமலிங்க தேவரின் ஆன்மீக விழாவும், 2-ம் நாள் அரசியல் விழாவும் கொண்டாடப்பட்டது. 3-ம் நாளான இன்று தேவரின் 103-வது பிறந்த நாள் மற்றும் 48-வது குருபூஜை விழா கொண்டாடப்பட்டது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்தில் கடந்த 2 நாட்களாக அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இன்று அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நேரம் ஒதுக்கப்பட்டது.
முதலில் தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் பசும்பொன் கிராமத்திற்கு சென்று அங்கு தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் தோழி சசிகலா, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் சென்றனர்.
வைகோ அஞ்சலி
இதைத் தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தினார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
தேவர் குருபூஜையை யொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.