கூடுதல் பணியாளர்கள் மூலம் விரைவில் புதிய குடும்ப அட்டை : முதல்வர் உத்தரவு
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. அக்கூட்டத்தில் அவர் நியாய விலக்கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரத்தை உயர் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். குடும்ப அட்டைகள் தொடர்பாக மேல் மூறையீடு செய்தவர்களின் மனுக்களை நிலுவையில் போடாமல் உடனுக்குடன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
விசாரணைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளுக்கு ஆய்வு முடியும் வரை அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட வேண்டும். புதிய குடும்ப அட்டைகள் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு உடனடியாக குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும்.
சென்னையில் நியாய விலைக்கடைகள் கட்டுவதற்கு மாநகராட்சிக்கு சொந்தமான நல்ல இடத்தை தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் கொள் முதல் செய்யும் காலத்தில் 20 சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள நிலையில் தான் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார் என்று அதில் கூறப்பட்டிருந்தது.