தனியார் பள்ளிக் கட்டண குழு: புதிய தலைவர் நீதிபதி ரவிராஜ பாண்டியன்
சென்னை: தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணயக் குழுத் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியனை அரசு நியமித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ம் தேதி நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு கட்டண நிரணயக் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு பள்ளிகளில் ஆராய்ந்து புதிய கட்டணத்தை நிர்ணயித்தது. இந்நிலையில் உடல் நலக் குறைவால் தம்மால் இந்த பொறுப்பில் தொடர்ந்து செயல்பட முடியாது என்று கூறி கோவிந்தராஜன் தனது ராஜினாமா கடிதத்தை அரசுக்கு அனுப்பினார்.
இதை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியனை கட்டணக் குழுவின் புதிய தலைவராக நியமித்துள்ளதாக் முதல்வர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார், என்று அதில் கூறப்பட்டிருந்தது.
தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தின்படி, பள்ளிக் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டு, அதன் தலைவராக நீதிபதி கோவிந்தராஜன் கடந்த டிசம்பர் மாதம் பதவியேற்றார்.
இந்தக் குழு, தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்து மே 7-ம் தேதி வெளியிட்டது. இதை எதிர்த்து 6,400 பள்ளிகள் மேல்முறையீடு செய்துள்ளன.
இந்த மனுக்களை 4 மாதங்களுக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுக்கள் மீது முடிவு எடுக்கும் வரை நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்தையே பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பள்ளிக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீதிபதி கோவிந்தராஜன் ராஜிநாமா செய்துவிட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. ஆனால், இந்தத் தகவலை அரசு மறுக்கவோ, ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கவோ இல்லை.
இந்த நிலையில், பள்ளிக் கட்டண நிர்ணயக் குழுவுக்கு நீதிபதி ரவிராஜ பாண்டியனை தலைவராக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.