தேர்தல் வந்தால்தான் ஜெயலலிதாவுக்கு தேவர் நினைவு வரும் : மு. க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
பசும்பொன்: தேர்தல் காலத்தில் மட்டும் தான் ஜெயலலிதா பசும்பொன்னுக்கு வந்து தேவருக்கு மரியாதை செலுத்துவார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை இன்று கோலாகலமாக கொண்டப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று காலை துணை முதல்வர் ஸ்டாலின் பசும்பொன் வந்தார். அங்குள்ள தேவர் நினைவிடத்தில் அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அவருடன் சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ஐ.பெரியசாமி, தமிழரசி மற்றும் எம். எல்.ஏ.க்களும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், "நாங்கள் ஆண்டுதோறும் வந்து தேவருக்கு மரியாதை செலுத்துகிறோம். அதிமுக பொதுச் செயலாளர் போன்று தேர்தல் காலத்தில மட்டும் வந்து அஞ்சலி செலுத்தும் பழக்கம் எங்களுக்கு இல்லை. நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் இங்கு வந்து முறையாக மரியாதை செலுத்தினோம். மேலும், மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைப்பது குறித்து மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருக்கிறோம். வேண்டுமானால் மீண்டும் எழுதி நினைவூட்டுவோம்", என்றார் அவர்.