தாமிரப் பொருட்களில் இரிடியம் இருப்பதாக கூறி மோசடி-2 பேர் கைது
களக்காடு: களக்காட்டில் பழங்கால தாமிர பொருட்களில் இரிடியம் இருப்பதாக ஏமாற்றி மோசடி செய்ய முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மாவடியை சேர்ந்தவர் ஸ்டீபன். இவர் கடந்த 27-10-2010ம் தேதி சாமி சிலையை கடத்த முயன்றபோது களக்காட்டில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சாமி சிலையை மாவடியை சேர்ந்த டிரைவர் கலைச்செல்வன் தன்னிடம் தந்ததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து கலைசெல்வனை பிடிக்க எஸ்பி அஸ்ரா கர்க் உத்தரவின் பேரில் களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று கலைச்செல்வனையும், அவரது நண்பர் சிங்கப்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தாமிரத்திலான பூ வாளி உள்ளிட்ட பழங்கால வீட்டு உபயோக பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோபுர கலசம் மற்றும் பழங்கால தாமிர பொருட்களில் பேட்டரி மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை பொருத்தி இரிடியம் இருப்பதாக கூறி ஏமாற்றி பல கோடி ரூபாய்க்கு அவற்றை விற்க முயன்றது தெரிய வந்தது.
கலைசெல்வனை போதை பொருள் கடத்திய வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர். கணேசன் எல்ஐசி ஏஜென்டாக உள்ளார். இவர்களுடன் தொடர்புடைய தென்காசி நன்னகரத்தை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ஜெயராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.