பணவீக்கத்தைக் குறைக்க வட்டி வீதத்தை மேலும் உயர்த்தும் ரிசர்வ் வங்கி!
நாட்டின் பொதுப் பணவீக்கம் 8.62 சதவீதமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன் இது மைனஸில் இருந்தது நினைவிருக்கலாம்.
இன்றைய சூழலி்ல் பொருளாதார வளர்ச்சியை 8.5 சதவீதத்திலிருந்து 9 சதவீதத்துக்குள் நிலைப்படுத்த வேண்டுமானால் இந்த பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்தாக வேண்டியது அவசியம் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
எனவே பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர உடனடி கருவியான வட்டி வீத உயர்வை கையிலெடுக்கிறது ரிசர்வ் வங்கி.
சமீபத்தில் வெளியாகியுள்ள 'பேரியல் பொருளாதாரம் மற்றும் பணவியல் விவகாரங்கள்' குறித்த அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளது ரிசர்வ் வங்கி.
இந்த ஆண்டு ஏற்கெனவே 5 முறை வட்டி வீதங்களை உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நிதியமைச்சரைச் சந்தித்தார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ். இந்த சந்திப்புக்குப் பின் அனைத்து வட்டி வீதங்களும் மேலும் ஒருமுறை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக ரெபோ ரேட் மற்றும் ரிவர்ஸ் ரெபோ விகிதத்தில் உடனடியாக இந்த உயர்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன