ஈரோடு மாவட்ட திமுக செயலாளராக மீண்டும் என்.கே.கே.பி. ராஜா-முத்துசாமிக்கு 'செக்'!
சென்னை: ஈரோடு மாவட்ட திமுக செயலாளராக என்.கே.கே.பி. ராஜா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் முத்துசாமிக்க திமுக தலைமை 'செக்' வைத்துள்ளது.
இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த என்.கே.கே.பெரியசாமி கேட்டுக் கொண்டதற்கு இணங்கவும், துணைப் பொறுப்பாளராகப் பணியாற்றி வந்த எஸ்.எல்.டி. சச்சிதானந்தம் ஒப்புதலோடும் அவரவர்கள் நியமிக்கப்பட்டிருந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
அவர்களுக்குப் பதிலாக, ஈரோடு மாவட்டச் செயலாளராக என்.கே.கே.பி.ராஜா மீண்டும் நியமிக்கப்படுகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில், ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜா கைத்தறித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2008ம் ஆண்டு பெருந்துறையைச் சேர்ந்த சிவபாலன் மற்றும் குகமணி ஆகியோரது நிலத்தை அபகரித்ததாகவும், இதை எதிர்த்த இருவரையும் கடத்தியதாகவும் ராஜா மீது புகார் கூறப்பட்டதையடுத்து அவர் மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார்.
மேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.
ராஜாவின் தந்தையும், முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பெரியசாமி மாவட்டப் பொறுப்பாளராகவும், துணைப் பொறுப்பாளராக எஸ்.எல்.டி.சச்சிதானந்தமும் நியமிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் ராஜா கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ராஜா மீது சிபிசிஐடி போலீஸார் ஆள்கடத்தல், நிலஅபகரிப்பு உள்பட 4 பிரிவுகளில் வழக்குகளைப் பதிவு செய்தனர். ஆனால், ஆள்கடத்தல் வழக்கில் இருந்து ராஜா விடுவிக்கப்பட்டுவிட்டார்.
இந் நிலையில், கொங்கு மண்டலத்தின் முக்கிய பகுதியான ஈரோடு மாவட்டத்தில் சமீபத்தில் திமுகவில் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் முத்துசாமியின் கை ஓங்கி வந்தது.
இதனால் திமுகவினரிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து ராஜா மீண்டும் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கருணாநிதியுடன் சந்திப்பு:
இந் நிலையில் என்.கே.கே.பி.ராஜா இன்று முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருடன் ஈரோடு மாவட்ட கட்சி நிர்வாகிகளும் உடன் சென்றனர்.