நவ 8-ல் சரணடைகிறார் ராமலிங்க ராஜு... அன்றே விசாரணை ஆரம்பம்!
ஹைதராபாத்: சத்யம் நிறுவன நிறுவனர் ராமலிங்க ராஜுவின் ரூ 14000 கோடி ஊழல் வழக்கு விசாரணை நவம்பர் 8-ம் தேதி ஹைதராபாத் கூடுதலா தலைமை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இது தொடர்பான 6 வங்கி அதிகாரிகளை சாட்சிகளாக ஆஜர்படுத்துகிறது சிபிஐ.
இந்த விசாரணையின் போது, ஊழலில் முதன்மைக் குற்றவாளியான ராமலிங்க ராஜு மற்றும் அவரது சகோதரர் ராமராஜு இருவரும் ஆஜராகிறார்கள். அன்றே ராமலிங்க ராஜு உள்ளிட்டோரின் ஜாமீனும் ரத்தாகிறது. இவர்களின் ஜாமீனை ரத்து செய்து உச்சநீதிமன்றம் ஆணையிட்டது நினைவிருக்கலாம்.
"உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கருத்தில் கொண்டு இந்த விசாரணையை விரைந்து முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பிரிவு 294-ன் கீழ் 1000 முக்கிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன", என்றார் சிபிஐ துணை இயக்குநர் விவி லட்சுமிநாராயணா.