டிசம்பர் 5 முதல் லாரிகள் ஸ்டிரைக்
சென்னை: சுங்கவரி வசூலிக்கும் முறையை வரும் 25-ம் தேதிக்குள் ஒழுங்குபடுதாவிடில் டிசம்பர் மாதம் 5-ம் தேதி முதல் லாரிகள் வேலை நிறுத்தம் துவங்கும் என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் சுங்கவரியை ஒழுங்குபடுத்தக்கோரி டிசம்பர் மாதம் 5-ம் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனங்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன.
இதற்கிடையே தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நேற்று நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது,
சுங்கவரியை முறைபடுத்தக்கோரி கடந்த ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் என்று அறிவித்திருந்தோம். உடனே அரசின் தரைவழி போக்குவரத்து துறை எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இந்த பிரச்சனைக்கு 10 நாட்களுக்குள் நல்ல தீர்வு காண்பதாக உறுதியும் அளித்தது. ஆனால் 3 மாத காலமாகியும் உறுதி உறுதியாகவே இருக்கிறது. எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் தனியார் சுங்கசாவடிகள் தானாகவே சுங்கவரியை ஏற்றி உள்ளன.
இதை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் பலனில்லை. எனவே, வரும் 25-ம் தேதிக்குள் அரசு சுங்கவரிப் பிரச்சனைக்கு தீர்வு காணாவிடில், அடுத்த மாதம் 5-ம் தேதி நள்ளிரவு முதல் நாங்கள் திட்டமிட்டவாறே காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் குதிப்போம்.
இந்தியா முழுவதும் எந்தவித வேறுபாடும் இன்றி ஒரே மாதிரியான சுங்கவரி வசூலிக்கப்பட வேண்டும் என்பது தான் எங்களின் முக்கிய கோரிக்கையாகும்.
நாங்கள் அறிவித்தபடி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் டிசம்பர் மாதம் 5-ம் தேதி நள்ளிரவு முதல் தமிழகத்தில் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் லாரிகளும், நாடு முழுவதும் 74 லட்சம் லாரிகளும் ஓடாது என்று கூறினார்.