பல்லடம் சாயப்பட்டறையில் விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி
திருப்பூர்: பல்லடம் சாயப்பட்டறையில் விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலியாயினர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் உள்ள சாயப்பட்டறையில் உப்பு நீரை நல்ல தண்ணீராக மாற்றும் பெரிய தொட்டி உள்ளது. நேற்று பிற்பகல் பட்டறை தொழிலாளர்கள் 4 பேர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
முதலில் இறங்கி. மருத காளை, அமாவாசை ஆகியோரை விஷ வாயு தாக்கியது. இதில் இருவரும் மயங்கி விழுந்தனர். அவர்களை மீட்க மற்ற தொழிலாளர்களான வேல்முருகன், லட்சுமணன் ஆகியோர் உள்ளே இறங்கினர். அவர்களும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து 4 பேரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், 4 பேரும் வழியிலேயே இறந்தனர்.
பலியான தொழிலாளர்களி்ன் குடும்பத்தாரும் உறவினர்களும் நேற்றிரவு உரிய இழப்பீடு வழங்க கோரி திருப்பூர்-தாராபுரம் ரோட்டில் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சு நடத்தி இழப்பீட்டைத் தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.