கர்நாடகா அழகி தென்னிந்திய அழகியாகத் தேர்வு : கேரளா 2-வது இடம், ஆந்திரா 3-வது இடம்
தென்னிந்திய அழகிகள் பங்கேற்கும் அழகிப் போட்டி கொச்சியில் கடந்த 3-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்தது. இதில் ஆந்திரா, கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். யோகா, தியானம், தனிநபர் ஆளுமை மற்றும் மேம்பாடு, நடை, அழகு உள்ளிட்ட பல்வேறு அடிப்படையில் அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தென்னிந்திய அழகியைத் தேர்ந்தெடுக்கும் இறுதிச் சுற்றுப் போட்டி நேற்று நடந்தது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து தலா 5 பேரும், கர்நாடகாவில் இருந்து 4 பேரும், ஆந்திராவில் இருந்து 2 பேரும் என மொத்தம் 16 அழகிகள் பங்கேற்கின்றனர்.
இறுதியில் கர்நாடக அழகி சுபா தென்னிந்திய அழகியாக முடிசூடப்பட்டார். அவருக்கு தங்க கிரீடமும், ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும் அளிக்கப்பட்டது. கேரள அழகி கீது கிறிஸ்டி இரண்டாவது இடத்தையும், ஆந்திர அழகி நிகிதா நாராயணன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
இரண்டாம் இடம் பெற்றவருக்கு ரூ. 50,000 மதிப்புடைய பரிசுகளும், மூன்றாவது இடம் பெற்ற அழகிக்கு ரூ.25,000 மதிப்பிலான பரிசுகளும் வழங்கப்பட்டது.