பாகிஸ்தான் பற்றி ஒபாமா அமைதி-பாஜக, கம்யூ. அதிருப்தி
3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மனைவி மிஷேலுடன் நேற்று மும்பையில் வந்து இறங்கினார். அவருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளி்க்கப்பட்டது.
பின்னர் அவர் நேற்று மும்பை தாஜ் ஹோட்டலில் பேசினார். கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி மும்பையின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்திய தீவரவாதிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மும்பை தாக்குதல் சம்பவம் பற்றி 6 நிமிடங்கள் பேசிய அவர் ஒரு முறை கூடப் பாகிஸ்தான பற்றி எதுவும் பேசவில்லை. இது அதிருப்தி அளிப்பதாக இருக்கிறது என்று பாஜக தெரிவித்துள்ளது.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இந்தியாவில் மறக்கமுடியாத அளவு தீவிரவாத தாக்குதல் நடந்த தாஜ் ஹோட்டலில் ஒபாமா முதன்முதலாக பேசினார். பாதிஸ்தானில் தான் அந்த கொடூர தாக்குதலுக்கு திட்டம்தீட்டியது என்பது பற்றிய ஆதாரங்கங்கள் அமெரிக்காவிடம் இருக்கிறது. ஆயினும், அவர் பாகிஸ்தான் பற்றியே பேசவில்லை.
ஒபாமா அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை வி்ட்டுவிட்டு தான் மட்டும் வந்திருப்பதில் இருந்து அவரது பயணத்தின் நோக்கம் வர்த்தகம் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவரது பயணத் திட்டத்தில் இந்தியா மிகவும் முக்கியம் என்று கருதும் எந்த விஷயமும் இல்லை என்று அவர் கூறினார்.
தாஜ் ஹோட்டலில் ஒபாமா பேசியது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறுகையில்,
ஒபாமாவின் பேச்சு எதிர்பார்த்ததே. அதில் வியப்படைவதற்கு ஒன்றும் இல்லை. தான் தாக்கப்படும்போது ஒரு மாதிரியும், மற்றவர்கள் தாக்கப்படும்போது இன்னொரு மாதிரியும் இரட்டை நிலையை கையாளுவது அமெரிக்காவின் வழக்கம் என்றார்.