ராமதாஸ் தம்பி காங்.கில் சேர்ந்ததால் மாஜி எம்.எல்.ஏ பலராமன் வெட்டப்பட்டார்?
சென்னை: சென்னை பூங்காநகர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ பலராமனை வெட்டிய சம்பவத்தில் பாமகவினருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக வட சென்னை மாவட்ட பாமக செயலாளர் சத்யாவைப் போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை பூங்காநகர் சட்டசபைத் தொகுதி உறுப்பினராக 1991ம் ஆண்டு முதல் 96 வரை இருந்தவர் பலராமன். வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். இவரது அலுவலகம் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ளது.
இன்று காலை பலராமன் வீட்டுக்கு பாமகவைச் சேர்ந்த பலர் திரண்டு வந்துள்ளனர். வந்தவர்கள், பலராமனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென பலராமன் சரமாரியாக வெட்டப்பட்டார். இதில் படுகாயமடைந்து கீழே விழுந்தார் பலராமன். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரளவே அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
படுகாயமடைந்த பலராமன் உடனடியாக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதில் ஒரு ரவுடி பிடிபட்டதாக தகவல்கள் வெளியாகின.
பாமகவினரே காரணம்:
இந்த நிலையில் தற்போது திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் டாக்டர் ராமதாஸின் தம்பி சீனிவாச கவுண்டரும், அவரது மகன் சந்திரசேகரனும், பாமகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தனர்.
டாக்டர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணி ராமதாஸும் கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களை புறக்கணிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
சீனிவாச கவுண்டரும், சந்திரசேகரனும் காங்கிரஸில் இணைய பலராமன்தான் தீவிர முயற்சிகள் எடுத்ததாக பேச்சு அடிபட்டது. இந்த நிலையில்தான் அவரை இன்று பாமகவினர் அலுவலகத்திற்கு வந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர் வெட்டப்பட்டுள்ளார்.
இதையடுத்து வட சென்னை மாவட்ட பாமக செயலாளர் சத்யாவை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை நகரில் இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.