கோவை சிறார்கள் கொலை குறித்து பேச அனுமதி மறுப்பு-அதிமுக, மதிமுக வெளிநடப்பு
சென்னை: கோவையில் இரண்டு சிறார்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேச சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி மறுத்ததால் சட்டசபையிலிருந்து அதிமுக, மதிமுக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்றுதொடங்கியது. இரங்கல் குறிப்புக்குப் பின்னர் நேற்று அவை ஒத்திவைக்கப்பட்டது. இன்று மீண்டும் அவை கூடியது.
முதலில் 2010-11ம் ஆண்டுக்கான கூடுதல் செலவீனங்களுக்கான முதல் துணை நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார்.
அப்போது அ.தி.மு.க. கொறடா செங்கோட்டையன் எழுந்து எதிர்க்கட்சிகள் ஜீரோ நேரத்தில் முக்கிய பிரச்சனைகளை பேச வாய்ப்பு அளிக்காமல் அரசுக்கு நன்றி தெரிவிப்பதற்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கிறீர்கள். இச்செயலை கண்டித்து சபையில் இருந்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.
இதை தொடர்ந்து அனைத்து அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்களும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் சபைக்கு வெளியே வந்த செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, சட்டம்-ஒழுங்கு, பள்ளி குழந்தைகள் கடத்தல் போன்றவைகள் கவலை தருவதாக உள்ளது. கோவையில் குழந்தைகளை கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் வரலாற்றில் இது வரை இல்லாதது ஆகும்.
இதை இன்று நடைபெறும் சட்டமன்றத்தில் பேசி விவாதிக்கவேண்டும் என்று ஏற்கனவே நாங்கள் சபாநாயகரிடம் அனுமதி கேட்டிருந்தோம். எங்களுக்கு அனுமதி தராமல் காங்கிரஸ் கட்சியினர் பாராட்டுவதற்கு மட்டும் அனுமதி வழங்குகிறார்.
மக்கள் பிரச்சனையை புரிந்து கொள்ளாமல் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு தராமல் இருந்ததால் இதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்றார் அவர்.