திருப்பதியில் இலவசத் தரிசனத்துக்கு கணினி ஐடி: காத்துக் கிடக்கத் தேவையில்லை
திருப்பதி: திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் பெறவிரும்புவோருக்கு கணினி அனுமதி அட்டை வழங்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் கோவில் வரிசையில் நிற்க வேண்டியதில்லை.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் ரூ. 50, ரூ. 300 என கட்டணம் செலுத்தி சாமியை தரிசிக்கின்றனர். இலவச தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் வைகுண்டம் 2-வது வரிசையில் காத்துக் கிடந்து தரிசனம் செய்கின்றனர்.
பக்தர்கள் பலர் இலவச தரிசன வரிசையில் செல்கின்றனர். இதனால் அவர்கள் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் காத்திருந்தால் தான் சாமியைத் தரிசிக்க முடிகிறது. பக்தர்கள் இவ்வாறு காத்திருப்பதைத் தவிர்க்கும் பொருட்டு அன்மையில் திருப்பதி கோவில் நிர்வாகம் அனுமதி அட்டை வழங்கத் துவங்கியுள்ளது.
அதன்படி பக்தர்களின் புகைப்படம், கை ரேகை ஆகியவை கணினியில் பதிவு செய்யப்பட்டு தரிசனத்திற்கான நேரம் குறிப்பிடப்பட்ட அட்டை வழங்கப்படுகிறது. எனவே, பக்தர்கள் வரிசையில் நின்று காத்துக்கிடக்கத் தேவையில்லை. குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தால் தசரிசனம் செய்யலாம்.
இது குறித்து திருமலை திருப்பதி முதன்மை செயல் அலுவலர் ஐ.ஒய்.ஆர். கிருஷ்ணாராவ் கூறியதாவது,
சாதாரண பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் காத்துக்கிடக்கும் நேரத்தை குறைக்கும் பொருட்டு இம்முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பக்தர்களிடம் இன்னும் இத்திட்டம் குறித்த போதுமான விழிப்புணர்வு ஏற்படவில்லை. இந்த நல்ல திட்டத்தை பக்தர்கள் இனியாவது பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் கூறினார்.