தமிழகத்தில் ஐ.டி. துறை அபார வளர்ச்சி!-அமைச்சர் பூங்கோதை
சென்னை: தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் அபார வளர்ச்சி பெற்றுள்ளதாக அந்த துறையின் அமைச்சர் டாக்டர் பூங்கோதை கூறினார்.
மேலும் மென்பொருள் ஏற்றுமதியிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
சென்னையைச் சேர்ந்த கேரியர் ஒன் சொல்யூஷன்ஸ் இந்தியா நிறுவனம் வடிவமைத்துள்ள, வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களையும், வேலை பெறுவதற்கான திறன்களையும் இலவசமாக வழங்கக்கூடிய 'கேரியர் பிளாட்டினம்' என்ற இணைய தளத்தை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்துவைத்தார் அமைச்சர் பூங்கோதை.
பின்னர் அவர் பேசுகையில், "தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் அபார வளர்ச்சி பெற்றுள்ளது. 2005-06-ம் ஆண்டில் ரூ 30 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் இருந்த மென்பொருள் ஏற்றுமதி, 2009-10ம் ஆண்டில் ரூ 36 ஆயிரத்து 755 கோடியாக உயர்ந்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் உயர்ந்திருப்பதே இதற்கு காரணம். 2005-06ம் ஆண்டில் 1,275-ஆக இருந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கை 2009-10-ல் 1,731-ஆக உயர்ந்துள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ஏற்றுமதியும் கணிசமாக உயர்ந்துள்ளது. இத்துறையை மேம்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம், வேலைவாய்ப்புகளும் பெருகியுள்ளன.
கேரியர் ஒன் சொல்யூஷன்ஸ் இந்தியா நிறுவனம் சரியான நேரத்தில் இந்த இணைய தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், வேலைக்காக காத்திருப்போர், சம்பந்தப்பட்ட வேலைக்கான தகுதியை வளர்த்துக்கொள்ள முடியும் என்றார்.