16வது ஆசிய விளையாட்டுப் போட்டி நாளை குவாங்ஷுவில் தொடங்குகிறது
குவாங்ஷு: 16வது ஆசிய விளையாட்டுப் போட்டி நாளை சீனாவின் குவாங்ஷு நகரில் தொடங்குகிறது.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசியாவின் பிரமாண்ட விளையாட்டுத் திருவிழா ஆசிய விளையாட்டுப் போட்டியாகும். 1951ம் ஆண்டு முதல் இப்போட்டி நடந்து வருகிறது. முதல் போட்டி டெல்லியில் நடைபெற்றது. கடைசியாக கத்தார் தலைநகர் டோஹாவில் 2006ம் ஆண்டு நடந்தது.
தற்போது 16வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் குவாங்ஷு நகரில் நாளை தொடங்குகிறது. இதற்காக பிரமாண்ட தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை தொடங்கி 27ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன.
மொத்தம் 476 பிரிவுகளில் 42 விளையாட்டுகள் இடம் பெறவுள்ளன. தங்கப் பதக்கங்களின்எண்ணிக்கை 476 ஆகும். இதற்கு முன்பு நடந்த போட்டிகளை இந்த இந்தப் போட்டியில்தான் அதிக அளவிலான விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கிரிக்கெட்டும் முதல் முறையாக இடம்பெறுகிறது. இந்தியா உள்பட ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 45 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் சேர்ந்து கலக்கவுள்ளனர். 53 மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தியாவிலிருந்து மொத்தம் 609 பேர் போட்டிகளில் பங்கேற்கின்றனர். கடந்த போட்டித் தொடரில் 432 பேர் தான் பங்கேற்றனர். இந்தமுறை32 போட்டிகளில் இந்தியா பங்கேற்கிறது.
டோஹா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 10 தங்கம், 17 வெள்ளி, 26 வெண்கலப் பதக்கங்களை அள்ளியது. ஆனால் சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா கலக்கலாக விளையாடி 2வது இடத்தைப் பிடித்து புதிய சாதனை படைத்தது. எனவே நாளை தொடங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்தியா சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.