அனைத்து நாடுகளும் சமமான வளர்ச்சி! - ஜி 20 மாநாட்டில் மன்மோகன் வலியுறுத்தல்
சியோல்: அனைத்து நாடுகளும் சமமான பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.
தென் கொரிய தலைநகர் சியோலில் ஜி-20 தலைவர்களின் 5-வது மாநாடு இன்று தொடங்கியது. நாளை நிறைவு பெறுகிறது.
இந்த மாநாட்டில், கொரியா, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஸ்பெயின், மால்வி(தென் ஆப்பிரிக்கா), எத்தியோப்பியா, வியட்னாம், சிங்கப்பூர் ஆகிய நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்தியா சார்பில் பிரதமர் மன்மோகன்சிங், அமெரிக்கா சார்பில் ஜனாதிபதி ஒபாமா, இங்கிலாந்து சார்பில் பிரதமர் டேவிட் கேமரூன், கனடா சார்பில் அந்த நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் ஆகியோர் பங்கு பெறுகிறார்கள்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் மன்மோகன்சிங் சியோல் போய் இருக்கிறார். அவருடன் திட்டக் கமிஷன் துணை தலைவர் மான்டெக்சிங் அலுவாலியா, வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ், நிதித்துறை செயலாளர் அசோக் சாவ்லா ஆகியோரும் சென்றுள்ளனர்.
மாநாட்டில் பங்கேற்கும் முன், சியோல் நகரில் பிரதமர் மன்மோகன்சிங் நிருபர்களிடம் பேசுகையில், "இந்த மாநாட்டில் உலக பொருளாதார வளர்ச்சி பற்றி விவாதிக்கிறோம். உலக அளவில் அனைத்து நாடுகளிலும் சமமான பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற கொள்கையை இந்தியா கொண்டு இருக்கிறது.
இதற்கு எதிராக செயல்படுவோருடன் இந்தியா போராட வேண்டிய நிலையில் இருக்கிறது. இந்த மாநாட்டில் மனம் திறந்த, ஒருமித்த, வரம்புகளுக்கு உள்பட்ட பேச்சு அமைய வேண்டும் என்று விரும்புகிறோம். ஏழை நாடுகளுக்கும், பணக்கார நாடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைக்கப்பட வேண்டும்.
உலக நாடுகளுக்கு, பொருளாதார வளர்ச்சி என்பது மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது. அதில் இந்தியா படிப்படியாக வெற்றி பெற்று வருகிறது.
பருவநிலை மாற்றம், வர்த்தகம், சுற்றுச்சூழல் மாசுபடுதலை தடுத்தல் போன்றவை பற்றியும் விவாதிக்கிறோம்...", என்றார்.