மோகனகிருஷ்ணன் உடலைக் கொண்டு வர சொந்த ஊரில் எதிர்ப்பு-கோவையிலேயே தகனம்
கோவை ரங்கே கவுடர் வீதியைச் சேர்ந்த ஜவுளி அதிபர் ரஞ்சித்குமார் ஜெயினின் மகள் முஷ்கின், மகன் ரித்திக் ஆகியோரைக் கடத்தியும், முஷ்கினை கொடூரமாக பாலியல் பலாத்காரம்செய்தும், பின்னர்கால்வாயில் இருவரையும்தள்ளி விட்டும் கொன்ற குற்றவாளி மோகனகிருஷ்ணன் நேற்று முன்தினம் போலீஸாரால் என்கெளன்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்தத் தகவல் கிடைத்ததும் மோகனகிருஷ்ணனை விட்டுப் பிரிந்து புதுக்கோட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வரும் அவனது மனைவி ஆரோக்கிய மேரி தனது ஒரு வயது மகள், தாயாருடன் கோவைக்கு விரைந்து வந்தார்.
மேலும், மோகனகிருஷ்ணனின் சொந்த ஊரான பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சியிலிருந்து அவனது தாய் சாவித்ரி, தாயார் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கோவை வந்தனர்.
மகனின் உடலை தான் பெற்றுக்கொள்வதாக ராதாகிருஷ்ணன் போலீஸாரிடம் தெரிவித்தார். ஆனால் உடலை அங்கலக்குறிச்சிக்குக் கொண்டு வரக் கூடாது என்று ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கோவையிலேயே உடலைத் தகனம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து பிரேத பரிசோதனை செய்வதற்கான படிவங்களில் கையெழுத்திட்டு விசாரணை நடத்துவதற்காக மாஜிஸ்திரேட் தெய்வம் நேற்று மதியம் 1 மணிக்கு மோகன கிருஷ்ணன் உடல் வைக்கப்பட்டிருந்த கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தார்.
பிரேத பரிசோதனை செய்யக்கோரும் படிவத்தில் அவர் கையெழுத்திட்டார். பின்னர் பஞ்சாயத்தார் மற்றும் சாட்சிகள் மற்றும் மோகனின் உறவினர்களிடம் அவர் விசாரணை நடத்தினார். அதை தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்ட மோகனின் உடலில் எங்கெங்கு குண்டு காயங்கள் உள்ளன என்று மாஜிஸ்திரேட் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
அதன் பின்னர் மோகனகிருஷ்ணன் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தபடுத்தப்பட்டது. பிரேதப் பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்து கொள்ளப்பட்டது.
மாலை 4 மணிக்கு பரிசோதனை முடிவடைந்தது. பின்னர் நாலரை மணியளவில் உடலை சுற்றி ஆம்புலன்ஸில் ஏற்றி பாப்பநாயக்கன்பாளையம் மின்சார மயானத்திற்குக் கொண்டு சென்றனர்.
அங்கு ராதாகிருஷ்ணன், ஆரோக்கிய மேரி மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களிடம் உடலை போலீஸார் ஒப்படைத்தனர். பின்னர் ஆரோக்கிய மேரி, ராதாகிருஷ்ணனிடம் கையெழுத்துப் பெற்றுக் கொண்டனர்.
அதன் பின்னர் மோகனகிருஷ்ணனின் உடல் எரியூட்டப்பட்டது.