சென்னையில் இரவில் கன மழை-உள் மாவட்டங்களில் இன்று பெய்யும்
சென்னை: தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தீவிரமைடைந்துள்ளது. சென்னையில் நேற்று இரவு கன மழை பெய்தது. இன்று தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகையில்,
தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் சில நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றது.
சென்னையில் குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி அதிகாலை வரையிலும் நல்ல மழை பெய்தது. இதனால் புறநகர்ப் பகுதிகளின் பல ரோடுகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளன.
இன்றும் காலையிலிருந்து வானம் மப்பும் மந்தராமுமாக காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக பழனியில் 12 செமீ மழை பெய்தது.
நாகை, குமாரபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் 4 செமீ மழை பதிவானது.
வெள்ளத்தில் சிக்கி மருந்துக் கடை உரிமையாளர் பலி:
இதற்கிடையே சத்தியமங்கலத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மருந்துக் கடை உரிமையாளர், மோட்டார் சைக்கிளுடன் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த ஒருவாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. சத்தியமங்கலம், கோபி, அந்தியூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சத்தியமங்கலத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவு விடிய விடிய இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
சத்தியமங்கலம் அருகே உள்ள தாசப்பகவுண்டன்புதூர் கீரிப்பள்ளம் ஓடையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் தரைப்பாலம் மழை வெள்ளத்தால் மூழ்கியது. இந்த நிலையில் அந்தப் பாலத்தை தாசப்பகவுண்டன்புதூரைச் சேர்ந்த மருந்துக் கடை வைத்துள்ள நாகராஜ் என்பவரும், அவருடைய நண்பர் வேலுச்சாமியும் கடக்க முயன்றனர்.
நீச்சல் தெரியும் என்பதால் தைரியமாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். ஆனால் காட்டாற்று வெள்ளம் படு வேகமாக வந்ததால் அவர்களது மோட்டார் சைக்கிளை அது அப்படியே அடித்துச் சென்றது.
இதில் இருவரும் விழுந்தனர். இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆனால் வேலுச்சாமி நீச்சலடித்தபடி தனது நண்பரையும் சேர்த்துக் காப்பாற்றி கரை சேர முயன்றார். ஆனால் இதில் நாகராஜ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டார்.
கண் முன்னால் தனது நண்பர் அடித்துச் செல்லப்பட்டதாலும், காப்பாற்ற முடியாததாலும், காப்பாற்றுங்கள் என்று கூறி குரல் எழுப்பினார். ஆனால் அப்பகுதியில் யாரும் இல்லாததால் அவரால் முடியவில்லை.
இரவு பத்தரை மணியளவில் தரைப்பாலம் முழுமையாக மூடி விட்டது. இதனால் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
வெள்ளத்தில் அடித்து் செல்லப்பட்ட நாகராஜை தேடும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதிகாலை 2 மணியளவில் வெள்ளம் சற்று தணிந்த பின்னர் தேடும் பணி தொடங்கியது. தரைப்பாலத்திலிருந்து ஒரு கிலோமீ்ட்டர் தொலைவில் முள் புதரில் சிக்கிய நிலையில் நாகராஜின் உடல் கிடைத்தது.
பரிதாபமாக உயிரிழந்த நாகராஜுக்கு விஷ்ணுப்பிரியா என்ற மனைவியும், 5 வயதில் விவேகானந்தன் என்ற மகனும் உள்ளனர்.