இந்தியா 2011-2012ல் 9 சதவீத வளர்ச்சி பெறும்! - மன்மோகன் சிங்
சியோல்: வரும் 2011-2012ல் இந்தியப் பொருளாதாரம் 9 சதவீத வளர்ச்சி பெறும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
தென்கொரியா தலைநகர் சியோலில் ஜி-20 நாடுகளின், உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதில், பிரதமர் மன்மோகன்சிங், அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன அதிபர் ஹு ஜிந்தோ, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், கனடா பிரதமர் ஸ்டீபன் ஹர்பங், பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் உள்ளிட்ட உலக தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பேசபகையில், "உலக பொருளாதார சரிவிலிருந்து இந்தியா மீண்டுவிட்டது. தற்போது பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
வருகிற 2011-12ம் நிதி யாண்டில் 9 சதவீதம் வளர்ச்சி விகிதத்தை அடைந்து சாதனை படைப்போம். 2009 -10-ம் ஆண்டில் எங்களின் வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதம் ஆக இருந்தது.
தற்போது அது 8.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலக பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு வளர்ச்சி மிகவும் குறைந்திருந்த நேரத்தில் கூட அதாவது 2008-ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 9 சதவீதமாக இருந்தது.
பின்னர் 2008-09ம் ஆண்டில்தான் 6.7 சதவீதமாக வளர்ச்சி குறைந்தது. தற்போது மீண்டும் வளர்ச்சி அடைந்து ஆசியா கன்டத்தில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது", என்றார் மன்மோகன் சிங்.