சென்னையில் நாம் தமிழர் இயக்க நிர்வாகி மதிவாணன் மரணம்
மதுரை: உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சீமானின் நெருங்கிய நண்பரும், நாம் தமிழர் இயக்க முக்கிய நிர்வாகியுமான மதிவாணன் திடீரென மரணம் அடைந்தார்.
நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்தவர் மதிவாணன் (27). இவர் ரத்தம் சம்பந்தமான நோய்க்காக சென்னை ஸ்ரீ காமாட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார்.
பின்பு அங்கிருந்து அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு ரத்தத்தில் உள்ள பிளேட்லட் எண்ணிக்கை குறைவாக இருந்தது. பின்னர் அவரின் மூளை செயல்படவில்லை என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் அவரின் மூளை முற்றிலும் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து அவரின் சுவாச குழாய் நீக்கப்பட்டவுடன் அவரின் இதயம் சில நிமிடங்களில் நின்றுபோனது.
இதையடுத்து நாம் தமிழர் இயக்கத்தினர், நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள் சோகத்துடன் காணப்பட்டனர்.
அவரது இறுதி மரியாதை நிகழ்வு இன்று மாலை மதுராந்தகத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போந்தூர் கிராமத்தில் நடைபெறுகிறது.