ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பான பிரதமரின் உத்தரவுகளை ராஜா மீறியதாக புதிய சர்ச்சை
ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பான சர்ச்சை ஏற்கனவே பெரிதாகியுள்ள நிலையில் பிரதமருக்கும், அமைச்சர் ராஜாவுக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்து குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோக முன்னாள் தொலைத் தொடர்புத் துறை செயலாளர் மாத்தூர் என்பவரும் ராஜா மீது குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தி...
2007ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி பிரதமருக்கும், அமைச்சர் ராஜாவுக்கும் இடையே 3 கடிதப் போக்குவரத்துகள் நடந்துள்ளன.
ராஜாவுக்கு பிரதமர் எழுதிய கடிதங்களில், 2ஜி ஏலம் நேர்மையாகவும், ஒளிவுமறைவின்றியும் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு கூறியுள்ளார்.மேலும், பிரதமர் அலுவலகத்திற்குத் தெரியாமல் முக்கிய நடவடிக்கை எதையும் எடுக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
எந்த முக்கிய, மேல் நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன் என்னிடம் அதுகுறித்து தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இன்னொரு கடிதத்தில், முதலில் வருவோருக்கு உரிமம் என்ற ராஜாவின் அணுகுமுறைக்கு பிரதமர் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். மேலும், 2001ல் நிர்ணயிக்கப்பட்ட விலையை 2008ம் ஆண்டு பயன்படுத்துவதற்கு்ம் அவர் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இந்தக் கட்டண நிர்ணயத்தை மாற்றியமைக்குமாறும் அவர் ராஜாவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பிரதமரின் கடிதங்களுக்கு ராஜா பதில் கடிதம் அனுப்பியுள்ளார். இருப்பினும் பிரதமரின் ஆட்சேபனைகளுக்கு அவர் அதில் விளக்கம் தரவில்லை என்று கூறப்படுகிறது.
அதன் பிறகு கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு ராஜா தரப்பிலிருந்து பிரதமருக்கு எந்தக் கடிதமும் போகவில்லை. டிசம்பர் 26ம் தேதி பிரதமருக்கு ராஜா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஏலம் தொடர்பாக (அப்போதைய) வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோர் ஒப்புதல் அளித்திருப்பதாக பிரதமருக்குத் தெரிவித்துள்ளார் ராஜா. இவ்வாறு அந்த செய்தி கூறுகிறது.
வருகிற திங்கள்கிழமை ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வருகிறது. கடந்த முறை விசாரணை நடந்தபோது மத்திய அரசையும், சிபிஐயையும் கடுமையாக கண்டித்திருந்தது உச்சநீதிமன்றம். ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் ஏன் இப்படி மெளனமாக இருக்கிறீர்கள் என்று உச்சநீதிமன்றம் கடுமையாக கேட்டிருந்தது.
இப்படிக் கேட்டும் கூட மத்திய அரசுத் தரப்பில் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே திங்கள்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது மத்திய அரசு மேலும் சில கடுமையான கேள்விகளை சந்திக்க நேரிடும் எனத் தெரிகிறது.
முன்னாள் செயலாளரின் குற்றச்சாட்டு:
இதற்கிடையே, முன்னாள் தொலைத்தொடர்புத்துறை செயலாளர் டி.எஸ்.மாத்தூர், ராஜா மீது சில குற்றச்சாட்டுக்களைக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், உரிமம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 2007ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி என்று முன்பு முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதை செப்டம்பர் மாதம் 25ம் தேதி என முந்தைய தேதிக்கு மாற்றி உத்தரவிடுமாறு என்னிடம் கூறினார் ராஜா.
ஆனால் இது இயற்கை நெறிகளுக்கு புறம்பானது என்பதால் என்னால் முடியாது என்று நான் கூறி விட்டேன். மேலும், முதலில் வருவோருக்கு உரிமம் என்ற அமைச்சரின் திட்டத்தையும் நான் கடுமையாக எதிர்த்தேன்.
ஆனால் அமைச்சர் எனது பேச்சைக் கேட்கவில்லை. இதையடுத்து சம்பந்தப்பட்ட இணைச் செயலாளரிடம், உரிமம் தொடர்பான எந்தக் கோப்பிலும் நான் கையெழுத்திட மாட்டேன் என்று கூறி விட்டேன். இதனால் என்னிடம் எந்தக் கோப்பும் வரவில்லை.
அதேபோல 2007ம் ஆண்டு மே மாதம் என்னை அழைத்த அமைச்சர் ராஜா, 500 புதிய உரிமங்களை வழங்கப் போவதாக கூறினார். இதைக் கேட்ட நான், அது சாத்தியமில்லை. அந்த அளவுக்கு ஸ்பெக்ட்ரமும் இல்லை. நாம் இவ்வளவு அதிகமான பேருக்கு உரிமம் கொடுத்து விட்டு, ஒரு வேளை சொன்னபடி ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்க முடியாமல் போனால் அவர்கள் கோர்ட்டுக்குப் போக நேரிடும். அது அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி விடும் என்றேன் என்று கூறியுள்ளார் மாத்தூர்.