3 ஆண்டுகளில் தமிழ் நாடு மெர்க்கன்டைல் வங்கி வர்த்தகம் ரூ.50,000 கோடியைத் தாண்டும்: நிர்வாக இயக்குனர்
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 90-வது நிறுவனர் தினவிழா தூத்துக்குடியில் நடந்தது. இதற்கு நிர்வாக இயக்குனர் ஜெகநாதன் தலைமை வகித்தார். பொதுமேலாளர் செல்வன ராஜதுரை வரவேற்றார். இதில் வங்கியின் முன்னாள் சேர்மன் ஜெயராஜ் கலந்து கொண்டு பேசினார்.
விழாவில் நிர்வாக இயக்குனர் ஜெகநாதன் பேசியதாவது,
கடந்த 1921-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி துவங்கப்பட்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இன்று 220 கிளைகளுடன் இயங்கி வருகிறது. இதற்கு 150 ஏடிஎம் மையங்கள் உள்ளன. வாடிக்கையாளர்களின் நலனுக்காக தொடர்ந்து பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
மெர்க்கன்டைல் வங்கியின் தற்போதைய வர்த்தகம் ரூ.21 ஆயிரம் கோடியாக உள்ளது. இன்னு்ம் 3 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடியைத் தாண்டும். அந்த அளவிற்கு வங்கி வளர்ச்சி அடைந்து வருகிறது.
அடுத்த நிறுவனர் தினத்திற்குள் வங்கி இன்னும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய உள்ளது. வீ்ட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலம் பங்குகள் வாங்க, விற்க ஏற்பாடு செய்யும் பணி மிக விரைவில் துவங்க உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.