எனது ஆலோசனையை புறக்கணித்தார் ராசா! - டெலிகாம் முன்னாள் செயலர் டி.எஸ். மாத்தூர்
போபாலில் வசிக்கும் அவர், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசியில் அளித்த பேட்டியில், "2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏலம் மூலம் வழங்கலாம். அப்போதுதான் ஒளிவுமறைவற்ற தன்மை இருக்கும். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குறைவாக உள்ளது. ஆனால், 500 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
எனவே, குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் உரிமங்களை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தேன். ஆனால், எனது யோசனையை அமைச்சர் ஆ. ராசா ஏற்றுக் கொள்ளவில்லை," என்றார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை தொலைத் தொடர்பு அமைச்சகம் மறுத்துள்ளது. 2007 செப்டம்பர் 25 வரையிலான விண்ணப்பங்களைப் பரிசீலித்து உரிமங்களை வழங்கலாம், இந்த காலக்கெடுவுக்குப் பின்னர் வரும் விண்ணப்பங்களைப் பிறகு பரிசீலிக்கலாம் என்று டி.எஸ். மாத்தூர் கையெழுத்திட்ட உத்தரவு நகல்களை தொலைத் தொடர்பு வட்டாரங்கள் மேற்கோள் காட்டியுள்ளன.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரப்பெற்ற விண்ணப்பங்களை நடைமுறையில் உள்ள கொள்கையின்படி பரிசீலித்து முடிவெடுக்கலாம் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து மாத்தூரிடம் கேட்டபோது, இந்த முடிவு முன்னரே எடுக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 121 புதிய நிறுவனங்களுக்கு சில வாரங்களில் உரிமங்கள் வழங்கப்பட்டது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
"இதை அமைச்சர் ஆ. ராசா எப்படிச் செய்தார் என்பது எனக்குத் தெரியாது. எனவே, இது குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது," என்றார்.
ஆனால் மாத்தூரின் கருத்து உள்நோக்கம் கொண்டது என்றும், அவரும் கையெழுத்து போட்ட பிறகே ஒதுக்கீடு நடந்ததாகவும் அமைச்சர் ராசா தெரிவித்துள்ளார்.