கட்சி தாவல் சட்டப்படி அமர்சிங், ஜெயபிரதா பதவியை பறிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்
அமர்சிங், ஜெயபிரதா ஆகிய இருவரும் சமாஜ்வாடி கட்சி சார்பில் எம்.பி.களாக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் இருவரையும் கட்சியைவிட்டு ஏற்கனவே நீக்கி விட்டனர். இந்நிலையில் பாராளுமன்றத்தில் நடந்த பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கான ஓட்டெடுப்பில் இருவரும் கட்சி கொறடாவின் கட்டளையை மீறி மசோதாவை ஆதரி்த்து ஓட்டுபோட்டனர்.
எனவே, கட்சி கொறடாவின் கட்டளையை மீறியதற்காக கட்சித் தாவல் தடை சட்டப்படி இருவரின் எம்.பி. பதவிகளையும் பறிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி அல்ட்மாஸ்சபீர் தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வநதது. வழக்கை விசாரித்த பெஞ்ச் இன்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
ஓட்டுபோடும் முன்பே இருவரும் கட்சியைவிட்டு நீக்கப்பட்டுவிட்டனர். இதனால் அவர்கள் கட்சி கொறடாவின் கட்டளையை ஏற்க வேண்டியது இல்லை. ஆகையால் அவர்களின் பதவியைப் பறிக்க முடியாது என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இதன் மூலம் இருவரது எம்.பி. பதவியும் தப்பியுள்ளது. தற்போது அமர்சிங் ஒரு புதுக் கட்சியைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்குத் துணையாக ஜெயப்பிரதாவும் அக்கட்சியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.