ஒரிசாவில் ஆந்திர பெண் நக்சலைட் தலைவர் கைது: தலைவர்களை தாக்கும் திட்டம் முறியடிப்பு
ஹைதராபாத்: ஆந்திர பெண் நக்சலைட் தலைவரை ஒரிசா-ஆந்திரா எல்லைப் பகுதியில் வைத்து ஒரிசா அதிரடிப்படையினர் கைது செய்தனர். இவரைப் பற்றி துப்பு கொடுப்போருக்கு ரூ. 2 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று ஆந்திர காவல்துறை அறிவித்திருந்தது.
ஆந்திராவில் மாவோயிஸ்டு நக்சலைட்கள் ஊழல் செய்யும் தலைவர்களை சுட்டுக் கொல்வோம் என்று பகிரங்கமாக அறிவித்து தாக்குதல் சம்பவங்களிலும் ஈடுபடத் துவங்கினர். இதையடுத்து அவர்களை வேரோடு அழிக்கும் பணியில் அரசு இறங்கியுள்ளது.
நக்சலைட்டு இயக்கத்தின் முக்கிய தலைவர் ராமகிருஷ்ணா. இவரது மனைவி பத்மா. இவர் பெண் நக்சலைட் படையின் தலைவராக உள்ளார். இவர் மீது பல கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தலைவர்களைத் தாக்கியதில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது.
இதனால் இவரைப் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 2 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்று காவல்துறை அறிவித்திருந்தது.
பத்மாவுக்கு கிராம மக்களிடம் செல்வாக்கு அதிகம் என்பதால் அவர் போலீஸ் கையில் சிக்காமல் இருந்தார்.
இந்நிலையில் அவரும், சில பெண் நக்சலைட்டுகளும் ஒரிசா- ஆந்திரா எல்லைப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து காட்டுக்குள் வந்த ஒரிசா அதிரடிப்படையினர் பத்மாவை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து லேப்-டாப், நவீன தகவல் தொடர்பு சாதனங்கள், ஊழல் புகார் கூறப்பட்ட அரசியல் தலைவர்களின் படங்கள், அவர்களது வீட்டு முகவரிகள், துப்பாக்கிகள் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்கள் ஹைதராபாத்தில் உள்ள ஊழல் தலைவர்களை தாக்க திட்டமிட்டிருந்ததை முறியடித்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பத்மாவின் கைதால் நக்சலைட்டுகள் மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் ஒரிசா - ஆந்திரா எல்லையோர போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஊழல் ஊழல் புகாரில் சிக்கியிருக்கும் தலைவர்களின் வீடுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.