4-வது நாளாக கண்டெய்னர் லாரி ஸ்டிரைக் நீட்டிப்பு: ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு
சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து எண்ணூர் வரை ஒழுங்கான ரோடு போடக் கோரி கண்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தில் இருந்து எண்ணூர் வரை ஒழுங்கான ரோடு இல்லாததால் கண்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் பல சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. பொது மக்கள் லாரி ஓட்டுநர்களை தாக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.
எனவே, ஒழுங்கான ரோடு போடக்கோரி கண்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் கடந்த சனிக்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில் துறைமுக பொறுப்பு கழகத் தலைவர் அதுல்யா மிஸ்ரா, தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அதிகாரி மோகன், மாநில அதிகாரி முருகன், கண்டெய்னர் டெர்மினல் சார்பில் அரசு, கஸ்டம்ஸ் அதிகாரி ரகு, தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பு தமிழக தலைவர் சுகுமார், டிரெய்லர் சங்க செயலாளர், ஏ.ஐ.டி.யு.சி. அன்புசெல்வம் உள்பட சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில் கலந்து கொண்ட லாரி உரிமையாளர்கள் கூறியதாவது,
ரோடு மோசமாக இருப்பதால் ஓட்டுநர்கள் லாரி ஓட்ட சிரமப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் ஓட்டுநர்களை தாக்குகின்றனர். போலீசாரும் நடவடிக்கை எடு்த்தபாடில்லை, துறைமுக சேர்மனையும் சந்தித்து பேச முடியவில்லை என்று கூறினர்.
குறைகளை நிவர்த்தி செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் லாரிகள் ஓடாமல் இருந்தால் தான் ஒழுங்கான ரோடு போட முடியும் என்று அவர்கள் கூறினர்.
லாரிகள் ஓடாததால் இது வரை ரூ. 2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாரிகள் எண்ணூர் வரை உள்ள சாலையை பார்வையிட்டு ஒரு முடிவு எடுப்பதாகத் தெரிவித்திருந்தனர். இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படாததால் இன்று 4-வது நாளாக கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்கிறது.