மாறன் சகோதரர்கள் கொடுத்த விருந்து-அழகிரி, ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை: ஸ்பெக்ட்ரம் விவகாரம் நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில் மாறன் சகோதரர்களான கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோர் நேற்று சென்னையில் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.
சென்னை ரிட்ஸ் ஹோட்டலில் இந்த விருந்துக்கு மாறன் சகோதரர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இது வழக்கமான குடும்ப சந்திப்பு விருந்து என்று மாறன் சகோதரர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக டெல்லியில் கனிமொழியும், சென்னையில் முதல்வர் கருணாநிதியும் எதிர்க்கட்சியினரின் கனைகளை சந்தித்து அவற்றுக்கு பதிலடி கொடுத்துக் கொண்டிருந்த நிலையில், ராஜாவைக் காக்க கடுமையாக போராடிக் கொண்டிருந்த நிலையில் நடந்துள்ள இந்த விருந்து நிகழ்ச்சியால் திமுக வட்டாரத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விருந்து நிகழ்ச்சிக்காக கோவையிலிருந்து சென்னை வந்து கலந்து கொண்டார் மு.க.ஸ்டாலின். அதேபோல, மதுரையில் தனது மகன் திருமண ஏற்பாடுகளில் பிசியாக இருந்து வரும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும் வந்து கலந்து கொண்டார். குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் விருந்தில் பங்கேற்றுள்ளனர்.
மு.க.அழகிரி நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே பங்கேற்கவில்லை. ஸ்பெக்ட்ரம் தொடர்பான திமுகவின் முக்கியக் கூட்டங்களுக்கும் அவர் போகவில்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை. மகன் கல்யாண ஏற்பாடுகளில் தான் பிசியாக இருப்பதால் எதிலும் கலந்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக கட்சித் தலைமையிடம் அவர் ஏற்கனவே தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முதல்வர் கருணாநிதிதான் ராஜாவுக்கு மிகுந்த ஆதரவுடன் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இருந்து வருகிறார். ராஜாவுக்கு ஏற்பட்ட அனைத்து நெருக்கடியையும் தனி மனிதராக கடுமையாக போராடி சமாளித்து வந்தார். அவரது அமைச்சர் பதவியைக் காக்கவும் கடுமையாக முயன்றார். கூடவே ஜெயலலிதா கேட்டு வந்த கேள்விகளுக்கும் அவர் சரியான பதிலடி கொடுத்து வந்தார்.
அதேபோல திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி, டெல்லியில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக் கனைகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பை கையில் எடுத்துக் கொண்டு சமாளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.