கோடம்பாக்கத்தில் கற்பழிப்பு முயற்சியில் பெண் கொலை?
சென்னை: கோடம்பாக்கத்தில் புதுமணப் பெண் பட்டப் பகலில் கொலை செய்யப்பட்டுள்ளார். கற்பழிப்பு முயற்சியில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
சென்னை கோடம்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் டிரைவர் ஸ்டாலின். இவரது மனைவி ஞானமேரி (25). இவர்களுக்கு 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
நேற்றும் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் ஸ்டாலின் வீடு திரும்பியபோது அவரது மனைவி ஞானமேரி படுக்கையில் பிணமாகக் கிடந்தார். அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது முகத்திலும் மார்பிலும் நகக் கீறல்கள் இருந்தன. அவர் அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டிருந்தன.
மோப்ப நாய் துப்பு துலக்குவதை தடுக்க மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. கொலையாளிகளை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஞானமேரியை கற்பழிக்க முயற்சி நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. அவர் தப்ப முயன்றதால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
அவரது கணவர் ஸ்டாலினிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவரது உறவினர்களான இரு வாலிபர்கள் நேற்று முன்தினம் வேலை கேட்டு வீட்டுக்கு வந்து சென்றது தெரிய வந்துள்ளது.
நேற்று ஸ்டாலின் இல்லாதபோதும் அவர்கள் வீட்டுக்கு வந்துள்ளனர். இதனால் அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.