மும்பை ஆதர்ஷ் வீட்டு வசதிக் கழக ஊழல்-சவானை விசாரிக்கவுள்ளது சிபிஐ
மும்பையில் கார்கில் தியாகிகளின் குடும்பத்தினருக்காக ஒதுக்கப்பட்ட ஆதர்ஷ் வீட்டுவசதிக் கழக வீடுகளை தனது மாமியார், கொளுந்தியாள் உள்ளிட்ட 3 உறவினர்களுக்கு ஒதுக்கியதாக பெரும் சர்ச்சையில் சிக்கினார் சவான். இதையடுத்து அவரை முதல்வர் பதவியிலிருந்து விலக காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது. அதை ஏற்று அவரும் பதவி விலகி விட்டார்.
இந்த வழக்கில் நவம்பர் 15ம் தேதி சிபிஐ, தொடக்க விசாரணையை பதிவு செய்தது. இதையடுத்து அசோக் சவான், அரசு அதிகாரிகள், ஆதர்ஷ் வீட்டு வசதிக் கழககத்தின் 103 உறுப்பினர்கள் ஆகியோரை சிபிஐ விசாரிக்க திட்டமிட்டுள்ளது.
அசோக் சவானையும் இந்த விசாரணைக்குட்படுத்தவுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவானின் மாமியாருக்கு ஒதுக்கப்பட்ட வீடும், கொளுந்தியாள் உள்ளிட்ட மற்ற இரு உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடும் இந்த வீட்டு வசதிக் குடியிருப்பின் 31வது மாடியில் உள்ளன.
பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான நிலத்தில்தான் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கட்டுமானத்தில் அப்பட்டமான விதிமீறல் நடந்திருப்பதாக மத்திய சுற்றுச்சூழல்துறை இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். விதி மீறிக் கட்டப்பட்ட தளங்களை இடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.