தர்மபுரி பஸ் எரிப்பு-3 தூக்குத் தண்டனைக் கைதிகளும் கவர்னரிடம் கருணை மனு தாக்கல்
சென்னை: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 அதிமுகவினரும் கருணை கோரி ஆளுநருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த ரவீந்திரன், முனியப்பன், நெடுஞ்செழியன் ஆகிய மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களைத் தூக்கிலிட நாள் குறித்து சேலம் கோர்ட் உத்தரவிட்டது. இருப்பினும் 3 பேரும் கருணை கோரி குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியதால், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று இவர்கள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் அண்ணாமலை, வேலூர் சிறைக்குச் சென்று மூன்று பேரையும் சந்தித்து, கருணை கோரி ஆளுநருக்கு எழுதப்பட்ட மனுவில் கையெழுத்து பெற்றார்.
இந்த மனு பின்னர் சிறை அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது. அவர்கள் இவற்றை சிறை கண்காணிப்பாளர் மூலம் ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர்.