தொடரும் மழை-கரூரில் காலரா பீதி
கரூர்: தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக கரூரில் காய்ச்சல் பரவியுள்ளது. இதனால் பொதுமக்களிடையே காலரா பீதி ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக கரூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் மழை விடாமல் கொட்டித் தீர்த்த வண்ணம் உள்ளது. இதனால் சாலை முழுக்க மழை நீர் ஆறாக ஓடுகி்ன்றது. அலுவலகம் செல்வோர் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோர் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
அத்துடன் நகரில் உள்ள குப்பை மேடுகள் எல்லாம் மழை நீரில் கரைந்து சுகாதார கேடு விளைவித்து வருகின்றது. மேலும் பல இடங்களில் கொசு தொல்லை அதிக அளவில் உள்ளது.
இதன் காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு காரணம் அறிய முடியாத வைரல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த காய்ச்சலுக்கு டாக்டரிடம் சென்று முறையாக சிகிச்சை பெற்றுக் கொண்டாலும் சரியாகவில்லை என்று கூறப்படுகின்றது.
இதனால் காலரா தாக்கியுள்ளதாக பொது மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகின்றது.