தமிழகத்தில் பரவலாக கன மழை-புயல் சின்னம் நகர்ந்ததால் மழை குறையும்
இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கை...
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கொளச்சலில் 19 செமீ மவையும், இரணியலில் 14 செமீ மழையும் பெய்துள்ளது.
இதேபோல தர்மபுரியில் 11 செமீ மழை பதிவாகியுள்ளது. திருவள்ளூர், விழுப்புரம், சேலம், காஞ்சிபுரம், ராமநாதபுரம், திருவண்ணாமலை, பெரம்பலூர் மாவட்டங்களிலும் கன மழை பெய்துள்ளது.
தர்மபுரியில் கன மழைக் கொட்டித் தீர்த்ததால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
19ம் தேதி காலை வரையிலான கால கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் கன மற்றும் மிக பலத்த மழை பெய்யக் கூடும்.
சென்னை நகரைப் பொறுத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்தில், வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலை ஆந்திராவை நோக்கி நகரத் தொடங்கியிருப்பதால், தமிழகத்தில் மழையின் அளவு குறையக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.