கல்விக் கடன் சரியாக கிடைப்பதில்லை-சிதம்பரத்தை வாரிய வாசன் ஆதரவு இளைஞர் காங். தலைவர்
காஞ்சிபுரம்: மத்திய அரசின் சாதனைகளை விளக்குவதற்காக தொடங்கப்பட்ட தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரையில் கோஷ்டிப் பூசல் குடியேறி காங்கிரஸை மேலும் பலவீனப்படுத்தி வருகிறது.
ஆரம்பத்தில் இந்த யாத்திரை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும், மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு பெயர் வாங்கிக் கொள்வதாக மக்களிடையை பாதயாத்திரையில் போனவர்கள் பிரசாரம் செய்ததால் திமுக தரப்பிலும் டென்ஷன் ஆனது. ஆனால் தற்போது கோஷ்டிப் பூசல் இதை ஓவர் டேக் செய்து விட்டது.
ஆங்காங்கு வாசன் ஆதரவாளர்களும், ப.சிதம்பரம் ஆதரவாளர்களும் மோதிக் கொள்கின்றனர். இந்த நிலையில் வாசன் ஆதரவாளரான இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ், மாணவர்களுக்கு கல்விக் கடன் சரியாக கிடைப்பதில்லை என்று காங்கிரஸ் கட்சியையே வாரியுள்ளார்.
கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடனை வழங்குவது மத்திய அரசுதான். வங்கிகள் மூலம் இதைத் தருகிறார்கள். இந்தக் கடன் முறையாக வழங்கப்படுவதில்லை என்பது நீண்ட காலமாக நிலவி வரும் குற்றச்சாட்டு. ஆனால் இதை தொடர்ந்து ப.சிதம்பரம் மறுத்து வருகிறார்.
இந்த நிலையில் வாசன் ஆதரவாளரான யுவராஜும் இதே புகாரைக் கூறியுள்ளதால் காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
யுவராஜா தலைமையில் நடந்து வரும் பாதயாத்திரைக் குழுவினர் காஞ்சீபுரத்தில் இருந்து முத்தியால்பேட்டை வழியாக வாலாஜாபாத், ஓரகடம் புறப்பட்டு சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜா,
இளைஞர் காங்கிரசாரின் நடைபயணம் உற்சாகத்தையும், எழுச்சியையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. செல்லும் இடங்களில் எல்லாம் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று சென்னை சேரவேண்டிய பாதயாத்திரை வருகிற 24ந் தேதி சென்றடையும்.
பாதயாத்திரையின்போது மத்திய அரசின் திட்டங்களை விளக்கி கூறி வருகிறோம். தமிழகத்தில் 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் சரிவர செய்யப்படவில்லை என நாங்கள் சுட்டிக்காட்டி வருகிறோம். இது மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே. அரசை குறை கூறுவதற்காக அல்ல.
மாணவர்களுக்கு கல்வி கடன் சரியாக கிடைப்பதில்லை. இதற்காக இளைஞர் காங்கிரஸ் சார்பில் தொகுதிக்கு 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். அவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவ மாணவிகளை சந்தித்து கல்வி கடன் கிடைக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.